கியார்கு கேன்ட்டர்
From Wikipedia, the free encyclopedia
கியார்கு கேன்ட்டர் (Georg Cantor; மார்ச் 3, 1845 - சனவரி 6, 1918) வரலாற்றுப் புகழ்மிக்க கணிதவியல் கருத்துக்களை முன் வைத்த செர்மன் கணிதவியலாளர் ஆவார். இவர் முன்வைத்த கணக் கோட்பாடுகள் கணிதவியலுக்கே அடித்தளம் தரும் அடிப்படைக் கொள்கை என்று போற்றப்படுகின்றன. இவருடைய முழுப்பெயர் கியார்கு ஃவெர்டினாண்டு லூடுவிக் ஃவிலிப் கேன்ட்டர் (Georg Ferdinand Ludwig Philipp Cantor) என்பதாகும். இவர் கணங்களுக்கு இடையே தனித்தனியாய் ஒன்றுக்கு-ஒன்றாக தொடர்பு பார்ப்பது பற்றிய சிறப்பை நிலைநாட்டினார், முடிவிலி மற்றும் சீரடுக்குக் கணங்களை வரையறுத்தார், மெய் எண்கள், இயல் எண்களைக் காட்டிலும் அதிகமானவை என்று நிறுவினார். கேன்ட்டரின் தேற்றத்தின் நீட்சியின்படி "முடிவிலா (எண்ணற்ற) முடிவிலிகள்" உள்ளன.
கியார்கு கேன்ட்டர் Georg Cantor | |
---|---|
பிறப்பு | கியார்கு பெர்டினண்ட் லூட்விக் பிலிப் கேன்ட்டர் (1845-03-03)மார்ச்சு 3, 1845 சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு |
இறப்பு | சனவரி 6, 1918(1918-01-06) (அகவை 72) கால், சாக்சனி மாகாணம், செருமானியப் பேரரசு |
வாழிடம் |
|
தேசியம் | செருமனியர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | கால்லி பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | இரண்டாம் வரிசை சமன்பாடுகள் மற்றும் அறியப்படாதவை (1867) |
ஆய்வு நெறியாளர் |
|
அறியப்படுவது | கணக் கோட்பாடு |
விருதுகள் | சில்வெஸ்ட்டர் பதக்கம் (1904) |
துணைவர் | வல்லி குட்மான் (தி. 1874) |
கேன்ட்டரின் வரைமீறு எண்கள் (transfinite numbers) என்னும் கோட்பாடு கணிதவியலாளர்கள், மெய்யியலாளர்கள், மற்றும் சமயவாதிகளிடமிருந்து மிகுந்த எதிர்ப்பைச் சந்தித்தது. புகழ்மிக்க கணிதவியலாளர்களாகிய லியோபோல்டு குரோனெக்கர் (Leopold Kronecker), என்றி பாயின்க்கரே (Henri Poincaré) முதலானோரும் [1], பின்னர் எர்மன் வெய்ல் (Hermann Weyl), புரௌவெர் (L.E.J. Brouwer) முதலானோரும் இக்கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தனர். லூடுவிக் விட்கென்சுட்டைன் (Ludwig Wittgenstein) என்னும் மெய்யியலாளரும், கிறித்தவ மதத்தினரும் எதிர்த்தனர் [2] ஒருமுறை வரைமீறு எண்களின் கோட்பாட்டை எல்லாக் கடவுள்களையும் ஏற்கும் மதத்துக்கு (pantheism) ஒப்பாகக் கூறினார்[3] . பாயின்க்கரே கேன்ட்டரின் கருத்தை கணிதவியலில் "பெரும் நோய்" ("grave disease") என்றும், குரோனெக்கர், கேன்ட்டரை "அறிவியல் ஏமாற்றுக்காரர்" ("scientific charlatan"), "இளைஞர்களை கெடுப்பவர்" ("corrupter of youth.") என்றெல்லாம் கூறி கடுமையாக தாக்கினர்.[4] கேன்ட்டர் இறந்து பல பத்தாண்டுகள் கழித்தும் விட்கென்ஸ்ட்டைன் கடுமையான சொற்களால் அவருடைய கணிதவியல் கருத்துக்களைத் தாக்கினார் ("முற்றிலும் பொருளற்றது", "ridden through and through with the pernicious idioms of set theory," , "utter nonsense", "laughable" and "wrong".)[5]
ஒருபுறம் இப்படிக் கடுமையாக தாக்குண்டாலும், அனைத்துலகப் புகழும், பரிசுகளும் அவருக்கு கிடைத்தன. இலண்டனில் உள்ள ராயல் சொசைட்டி 1904ல் சில்வெசுட்டர் பதக்கம் தந்து பெருமை படுத்தியது [6]. இன்று கணிதவியலாளர்கள் கேன்ட்டரின் கோட்பாடுகள் கணிதவியலுக்கே அடித்தளம் தரும் முதன்மைப் படைப்புகள் என்று பாராட்டுகின்றனர்.