பூஞ்சையியல்
பூஞ்சைகளைப் பற்றி விளக்கும் உயிரியலின் ஒரு பிரிவு / From Wikipedia, the free encyclopedia
பூஞ்சையியல் (Mycology) என்பது பூஞ்சைகளைப் பற்றி விளக்கும் உயிரியலின் ஒரு பிரிவாகும். பூஞ்சைகளின் மரபியல், உயிர்வேதியியல், நச்சுத்தன்மை, மனிதர்களுக்கான இவற்றின் பயன்கள், தீங்குகள் உட்பட்ட பண்புக்கூறுகள் அனைத்தும் இப்பிரிவில் ஆராயப்படுகின்றன. இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் பூஞ்சையியல் அறிஞர் எனப்படுகின்றார்.
பூஞ்சையியல் என்ற துறையிலிருந்து தாவர நோயியல் என்ற ஒரு உயிரியல் துறை உருவானது. தாவர நோய்களையும் அவற்றைக் கட்டுபடுத்துகின்ற நுறைகளையும் விளக்குகின்ற அறிவியல் துறைக்கு தாவர நோயியல் என்று பெயராகும். இரண்டு துறைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையனவாக இருக்கின்றன. ஏனெனில், தாவரங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் பெரும்பாலான நோய்க்கிருமிகள் பூஞ்சைகளாக இருக்கின்றன. பரிணாம வளர்ச்சியில் பூஞ்சைகள் தாவரங்களைக் காட்டிலும் விலங்குகளுடன் மிக நெருக்கமான தொடர்புடையனவாக இருந்தாலும், வரலாற்றில் பூஞ்சையியல் தாவரவியலின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இது அங்கீகரிக்கப்படவில்லை. எலியாசு மக்னசு பிரைசு, கிறிசுடியன் என்றிக் பெர்சூன், அன்டன் டி பாரி, இலூயிசு டேவிட் வொன் சுவின்டிட்சு உள்ளிட்ட முன்னோடி பூஞ்சையியல் அறிஞர்களாக கருதப்படுகின்றனர்.
நச்சுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்களை பல பூஞ்சைகள் உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, உலகளாவிய இனமாக விளங்கும் பியூசரியம் என்ற காளான் இழை பூஞ்சையைப் பற்றியும், மனிதர்களிடத்தில் ஏற்படுத்தும் அபாயகரமான திடீர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அவற்றின் நச்சுத்தன்மை பற்றியும் ஆபிரகாம் யோஃபி என்பவர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பூமியில் வாழ்வதற்கு பூஞ்சைகள் அடிப்படையானவையாகும். ஏனெனில் இவற்றின் பங்கு ஒரு கூட்டுயிர் இணைத்தாவரம் ஆகும். உதாரணம்: வேர்பூஞ்சைகள், பூச்சி இணையுயிர்கள், லைகென்கள். பல பூஞ்சைகள் சிக்கலான கரிம மூலக்கூறுகளை சிதைக்கும் சக்தியைப் பெற்றுள்ளன. நீடித்து உழைக்கும் மரத்தின் பகுதிப்பொருளான இலிக்னின், மாசுக்களான அயலுயிரிகள், பெட்ரோலியம், பல்வளைய அரோமாட்டிக் கார்பன்கள் போன்றவை சிக்கலான கரிம மூலக்கூறுகளில் அடங்கும். உலக கார்பன் சுழற்சியில் பூஞ்சைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பூஞ்சைகளும் பாரம்பரியமாக பூஞ்சைகள் என்று கருதப்படுகின்ற பிற உயிரினங்களும் பெரும்பாலும் பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவற்றில் பல தாவரங்களிலும் விலங்குகளிலும் நோய்களை உண்டாக்குபவையாகவும் உள்ளன.
நோய் உண்டாக்குபவை என்பதைக் கடந்து பல பூஞ்சைகள் தாவர நோய்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய உயிரினங்களாகவும் விளங்குகின்றன. உதாரணமாக அனைத்து வகையான மண்ணிலும் இருக்கக்கூடிய டிரைகோடெர்மா எனப்படும் இழைப்பூஞ்சைகள் மிகமுக்கியமான உயிரியல் கட்டுப்பாட்டு முகவராகக் கருதப்படுகின்றன. பயிர் நோய் மேலாண்மையில், வேதியியல் சார்ந்த அடிப்படை பொருட்களுக்கு மாற்றாக இவ்விழைப் பூஞ்சைகள் கருதப்படுகின்றன [1]. பூஞ்சைகளின் சுவாரசியமான இனங்களைக் கண்டுபிடிக்க அவ்வப்போது புலக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 1868 இல் வுல்ஃகோப் இயற்கையாளர்கள் களச் சங்கம் "பூஞ்சைகள் மத்தியில் ஒரு தாக்குதல்" என்ற தலைப்பில் முதல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது[2].
சில பூஞ்சைகள் மனிதர்களிடத்திலும் பிற உயிரினங்களிடத்தும் நோய்களை உருவாக்குகின்றன. இத்தகைய நோய் உருவாக்கும் பூஞ்சைகளை ஆராய்கின்ற அறிவியல் பிரிவு மருத்துவப் பூஞ்சையியல் என்று அழைக்கப்படுகிறது[3]