இலியட்
From Wikipedia, the free encyclopedia
இலியட் என்பது பண்டைக் கிரேக்க இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்று. மற்றது ஆடிசி (Odyssey). இலியட், ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது ஒரு புலவரால் எழுதப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் உள்ள பாடல்களில் வாய்வழி மரபுகளுக்கான சான்றுகள் காணப்படுவதால் இது பலரால் ஆக்கப்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.
இன்று கிடைக்ககூடியதாக இருக்கும் பழங்காலக் கிரேக்க இலக்கியங்களில் இதுவே பழையது என்பதால், முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், இலியட்டும், ஆடிசியும் கிமு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்கள் என்னும் கருத்தே நிலவிவந்தது. பலர் இன்னும் இதே கருத்தையே கொண்டிருப்பினும், மார்ட்டின் வெஸ்ட், ரிச்சார்ட் சீஃபோர்ட் போன்ற சிலர் இவை கிமு ஏழாம் நூற்றாண்டிலோ அல்லது ஆறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
இதிலுள்ள பாடல்கள், கிரேக்கர்களால் இலியன் அல்லது திராய் (Troy) எனப்பட்ட நகரம் முற்றுகை இடப்பட்ட, டிரோஜான் போரின் பத்தாம் மற்றும் இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கூறுகின்றது. இதன் கரு கிரேக்கப் போர் வீரனான ஆக்கிலீசையும், மைசீனி அரசன் அகமெம்னான் மீது அவனுக்கு இருந்த கோபத்தையும் பற்றியது. இது கிரேக்கர்களுக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. இதில் வரும் நிகழ்வுகள் பல பிற்கால இதிகாசங்களுக்குக் கருப்பொருளாக அமைந்தன.
இலியட் 15,693 பாடல் வரிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இது 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.