ஆசியாவில் கிறித்தவம்
From Wikipedia, the free encyclopedia
ஆசியாவில் கிறித்தவம் (Christianity in Asia) என்பது இயேசு கிறித்துவைக் கடவுளின் மகனாக ஏற்று வழிபடுகின்ற கிறித்தவ சமயம் ஆசியக் கண்டத்தில், அதுவும் குறிப்பாக மேற்கு ஆசியாவில் தோன்றி, இயேசுவின் சீடர்களின் பணி வழியாக ஆசியா முழுவதும் பரவி நிலைபெற்றதைக் குறிக்கிறது.
மேற்கு ஆசியாவில் தொடக்க காலக் கிறித்தவ மையங்களாக அமைந்தவை எருசலேம், அந்தியோக்கியா போன்ற நகரங்கள் ஆகும்.
மேலும் கிழக்காக, பார்த்தியப் பேரரசிலும் (இன்றைய ஈரான் நாடு), இந்திய நாட்டிலும் கிறித்தவ சமயம் இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமாவின் மறைப்பணி வழியாகப் பரவியது என்று மரபு கூறுகிறது.
கிபி 301இல் ஆர்மீனியா நாடும், கிபி 327இல் ஜோர்ஜியா நாடும் கிறித்தவத்தைத் தம் நாட்டு மதமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டன.
கிபி 431இல் எபேசு நகரில் ஒரு முக்கியமான பொதுச்சங்கம் நிகழ்ந்தது. அது இயேசு கிறித்து உண்மையிலேயே கடவுள் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டுள்ளார் என்று அறிக்கையிட்டது. மனிதராகவும் அதே நேரத்தில் கடவுளாகவும் விளங்குகின்ற இயேசு ஒரே தெய்விக ஆளாக உள்ளார் என்பதும், அதனால் இயேசுவின் தாய் ஆகிய மரியாவைக் "கடவுளின் தாய்" என்று அழைத்துப் போற்றுவது சரியே என்றும் சங்கம் வரையறுத்தது. ஆனால் நெஸ்டோரியக் கொள்கை என்னும் கோட்பாடு மேற்கூறிய போதனைக்கு எதிராக எழுந்தது. அதன்படி, இயேசு கிறித்துவில் மனித ஆள், தெய்விக ஆள் என்று இரு ஆள்கள் உள்ளனர்; அவர்கள் இருவரும் "அன்பு" என்னும் பிணைப்பால் தொடர்புகொண்டுள்ளனர்.
நெஸ்டோரியக் கொள்கையைக் கண்டனம் செய்து, அது "தப்பறை" என்று எபேசு பொதுச்சங்கம் (431) போதித்தது. இவ்வாறு நெஸ்டோரியக் கொள்கை கத்தோலிக்க திருச்சபையால் "திரிபுக் கொள்கையாக" (heresy) கணிக்கப்பட்டது.
நெஸ்டோரியக் கொள்கையின் காரணமாக கிறித்தவத்தில் பிளவு ஏற்பட்டது. எபேசு பொதுச்சங்கத்தின் முடிவுகளை ஏற்ற மேற்குத் திருச்சபை, நெஸ்டோரியக் கொள்கைகளை ஏற்ற கிழக்குத் திருச்சபை என்னும் பிளவு நிகழ்ந்தது.
நெஸ்டோரிய சபையினர் கிபி 7ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியரிடையே கிறித்தவத்தைப் பரப்பினர். அதுபோலவே, சீனாவிலும் டாங் வம்சத்தினர் (Tang Dynasty) காலத்தில் (618-907) நெஸ்டோரிய கிறித்தவம் பரவியது.
மங்கோலியர்கள் பொதுவாக சமய சகிப்புத் தன்மை கொண்டிருந்தனர். மங்கோலிய இனக்குழுக்கள் பலவும் கிறித்தவத்தைத் தழுவின. செங்கிஸ் கான் என்னும் மங்கோலியப் போர்த்தலைவரின் பேரனாகிய மோங்கே கான் காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டில், கிறித்தவம் மங்கோலியாவில் ஓரளவு செல்வாக்குடையதாய் விளங்கியது.
அதே காலகட்டத்தில் மேற்கு திருச்சபையையும் கிழக்கு திருச்சபையையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து கிறித்தவ மறைபரப்பாளர்கள், குறிப்பாக பிரான்சிஸ்கன் சபை, தொமீனிக்கன் சபை (சாமிநாதர் சபை), இயேசு சபை ஆகிய துறவற சபைகளைச் சார்ந்த குருக்களும் சபை உறுப்பினர்களும் ஆசிய நாடுகளுக்குக் கிறித்தவத்தைக் கொண்டு சென்றார்கள்.
18ஆம் நூற்றாண்டில் எசுப்பானிய மறைபரப்பாளர்கள் பிலிப்பீன்சு தீவுகளில் கிறித்தவத்தைப் பரப்பினர். கொரியா நாட்டுக்கு கத்தோலிக்க திருச்சபை சீனாவிலிருந்து 1784இல் பொதுநிலையினரால் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 50 ஆண்டுகளாக அச்சபை குருக்களின்றி செயல்பட்டது.
இன்று, கீழ்வரும் ஆசிய நாடுகளில் கிறித்தவம் முக்கிய மதமாக விளங்குகிறது:
குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராகக் கிறித்தவர்கள் கீழ்வரும் ஆசிய நாடுகளில் உள்ளார்கள்:
- லெபனான்
- தென் கொரியா
- சிரியா
- கசக்ஸ்தான்
- மேலும் பல ஆசிய நாடுகள்.