ஆல்சிபியாடீசு
ஏதெனிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஆல்சிபியாடீசு (Alcibiades, AL-sib-EYE-ə-deez (listen) ; கிரேக்கம்: Ἀλκιβιάδης ; சு. கிமு 450 – 404 ) என்பவர் ஒரு முக்கியமான ஏதெனிய அரசியல்வாதி, பேச்சாளர், தளபதி ஆவார். பெலோபொன்னேசியப் போருக்குப் பிறகு முக்கியத்துவம் குறைந்த அல்க்மேயோனிடேயின் வம்சாவளியில் கடைசியானவர் இவராவார். அந்தப் போரின் இரண்டாம் பாதியில் இவர் ஒரு மூலோபாய ஆலோசகர், இராணுவத் தளபதி, அரசியல்வாதி என முக்கிய பங்குகளை வகித்தார்.
ஆல்சிபியாடீசு | |
---|---|
ஆல்சிபியாடீசுக்கு சாக்கிரடீசு போதிக்கிறார் (1776) பிரான்சுவா-ஆண்ட்ரே வின்சென்ட் | |
பிறப்பு | கிமு அண். 450 ஏதென்ஸ், கிரேக்கம் |
இறப்பு | கிமு 404 (45-46 வயதில்) எலாஃபோஸ் மலை, பிரிஜியா, அகாமனிசியப் பேரரசு (தற்கால துருக்கி) |
சார்பு | ஏதென்சு எசுபார்த்தா (கி.மு 415–412 ) பாரசீகம் (412–411 BC) |
தரம் | தளபதி (ஸ்ரடிகெஸ்) |
போர்கள்/யுத்தங்கள் |
பெலோபொன்னேசியன் போரின் போது, ஆல்சிபியாடீசு தனது அரசியல் விசுவாசத்தை பலமுறை மாற்றிக்கொண்டார். கிமு 410 களின் முற்பகுதியில் இவர் ஏதென்சில், ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை ஆதரித்தார் மேலும் சிசிலியன் படையெடுப்பின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். இவரது அரசியல் எதிரிகள் இவர் தெய்வங்களை அவமதித்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணைக்கு அழைத்தபோது, இவர் எசுபார்த்தாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் போர் உத்தி ஆலோசகராக பணியாற்றினார். ஏதென்சுக்கு எதிரான பல முக்கிய போர்த் தொடர்களை முன்மொழிந்தார் அல்லது மேற்பார்வையிட்டார். இருப்பினும், ஆல்சிபியாடீசுக்கு எசுபார்த்தாவிலும் பலமான எதிரிகள் உருவாகினர். அதனால் இவர் பாரசீகத்திற்குச் சென்றார். ஏதெனிய அரசியல் கூட்டாளிகள் இவரை திரும்ப அழைக்கும் வரை அங்கேயே பாரசீக ஆளுநர் திசாபெர்னசின் ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் இவர் பல ஆண்டுகள் ஏதெனியன் தளபதியாக (சிரடிகெசு) பணியாற்றினார். ஆனால் இவரது எதிரிகள் இறுதியில் இரண்டாவது முறையாக நாடுகடத்துவதில் வெற்றி பெற்றனர்.
சிசிலியன் போர்ப் பயணம் நிசியாசின் தலைமைக்கு பதிலாக ஆல்சிபியாடீசின் தலைமையின் கீழ் இருந்திருந்தால், அந்தப் போர் பயணம் அதன் இறுதியில் பேரழிவு தரும் விதமாக இருந்திருக்காது என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர்.[1] இவர் எசுபார்த்தாவிற்கு சேவை செய்த காலங்களில், ஏதென்சுக்கு எதிரான செயல்களில் ஆல்சிபியாடீசு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். திசெலியாவை கைப்பற்றுதல் மற்றும் பல முக்கியமான ஏதெனியன் கூட்டணி அரசுகளின் கிளர்ச்சிகள் போன்றவை இவரது பரிந்துரையின் பேரில் அல்லது அவரது மேற்பார்வையின் கீழ் நிகழ்ந்தன. எவ்வாறாயினும், தனது சொந்த நகரத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டவுடன், ஏதென்சுடன் சமாதானத்தை நாடுவதற்கு எசுபார்த்தாவை வழிக்கு கொண்டுவந்த ஏதெனியன் வெற்றிகளின் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவர் வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களை விரும்பினார், முற்றுகையால் அல்லாமல் துரோகம் அல்லது பேச்சுவார்த்தை மூலம் பெரும்பாலும் நகரங்களை வென்றார்.[2] ஆல்சிபியாடீசு எந்த அரசுக்கு விசுவாசமாக இருக்கிறாரோ அந்த அரசுக்கு தனது இராணுவ மற்றும் அரசியல் திறமைகளால் ஆக்கத்தை தேடித்தருவதை இவர் அடிக்கடி நிரூபித்தார். ஆனால் இவரது செயல்பாட்டால் சக்திவாய்ந்த எதிரிகளை உருவாக்கும் நிலை இருந்ததால் இவர் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை என்பதை உறுதி செய்தது.