குடும்பம்
From Wikipedia, the free encyclopedia
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்புபட்ட ஓர் உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஓர் உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது."[1] நெருங்கிய குடும்பம் என்பது வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்கள், மகள்கள் ஆகியோரை உள்ளடக்கும். இவர்களோடு, பெற்றோரின் உடன்பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர், மருமக்கள் போன்றோரும் சேர்ந்து விரிந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பெரும்பாலான சமுதாயங்களில் பிள்ளைகள் சமூகமயமாவதற்கான முதன்மை நிறுவனமாகக் குடும்பம் விளங்குகிறது. உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் நோக்குகையில் குடும்பத்தின் முக்கியமான தொழிற்பாடுகளில் ஒன்று புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதாகும். இந்தத் தொழிற்பாடு, பகிர்தல், கவனிப்பு, பராமரிப்பு, பேணி வளர்ப்பு என்பவற்றைக் கொடுத்தல் / பெற்றுக்கொள்ளல், ஒழுக்கநல உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல், அறமுறையிலான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றால் பேணப்படுகிறது[2][3]. ஆனாலும் புதிய உறுப்பினரை உருவாக்குவது மட்டுமே குடும்பத்தின் முக்கியமான பணியல்ல. இரு நபர்களுக்கிடையில் பிணைப்பின்மூலம், பொருளியல் அடிப்படையில், ஓர் ஆக்கபூர்வமான ஓர் அமைப்பை உருவாக்குவதுமாகும்[4][5][6].
பிள்ளைகளைப் பொறுத்த வரையில், குடும்பமானது, குடும்ப அமைப்புக்கான ஓர் அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. அதேவேளை பெற்றோரைப் பொறுத்த வரையில், குடும்பமானது, பிள்ளைகளை உருவாக்கி, சமூகத்துடன் அவர்களைப் பிணைக்கும் இடமாக இருக்கிறது.