பகலொளி சேமிப்பு நேரம்
From Wikipedia, the free encyclopedia
பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை, பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. "சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.
பகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.
இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.
பகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து, ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.
பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.