பனிச்சரிவு
From Wikipedia, the free encyclopedia
பனியடுக்குச் சரிவு (avalanche) அல்லது பனிச்சரிவு (snowslide)) என்பது சரிவான மேற்பரப்பில் விரைந்த பனியின் பாய்வு ஆகும். இவை தொடங்கும் இடத்தில் பனிப்பாளத்தின் வலிமை வேறுபாட்டால் அதாவது பனிப்பாளத்தின் மூதுள்ள விசை அதன் வலிமையைக் காட்டிலும் கூடுதலாக அமையும்போது ஏற்படுகின்றன.இது பனிப்பாளச் சரிவாகும். சிலவேளைகளில், இது படிப்படியாக மெல்லத் தளர்ந்து அகலமாகிப் பாய்கிறது. இது தளர்பனிச் சரிவு எனப்படுகிறது. பனிச்சரிவு தொடங்கிய பிறகு, கூடுதல் பனியால் பொருண்மையிலும் பருமனிலும் வளர்ந்து முடுக்கப்படுகின்றன. வேகமாகப் பனிச்சரிவு பாயும்போது. பனிக்கட்டி காற்றூடே கலந்து பனித்தூவியாகி பனித்தூவிச் சரிவை ஏற்படுத்துகிறது. இது ஓர் ஈர்ப்பியக்க ஓட்டமாகும்.
இது உயர்ந்த மலைப் பகுதிகளில் பனித்தூவி விழுந்து ஏராளமாய்ச் சேர்ந்திருக்கும் பொழுது ஏதேனும் வானிலை காரணமாக, சாய்வும் சரிவுமாக உள்ள மலைப் பகுதிகளில் திரண்டிருக்கும் பனி சரியத் தொடங்கினால் மாவு போன்ற பனியானது திரளாக காட்டுவெள்ளம் போல் சரிந்து விரைவாக கீழே பாயும். அப்படிப் பாயும் பொழுது மேலும் மேலும் மாவு போன்ற பனி திரண்டு வழியில் இருக்கும் மாந்தர்கள் உட்பட எல்லாவற்றையும் மூடிப் புதைய செய்து விடும். இதனால் ஆண்டுதோறும் பனிமலைப் பகுதிகளில் பனிச் சறுக்காட்டங்கள் ஆடுவோர் பலர் இறக்க நேரிடுகின்றது. இந்நிகழ்வு திடீர் என நிகழ்ந்தாலும் ஓரளவிற்கு முன்கூட்டியே அறியவும், சிறிதளவு தடுக்கவும் இயலுகின்றது.
பனிச்சரிவைப் போலவே பாயும் பாறை அல்லது பாறைச் சிதிலங்கள் அல்லது மட்குவை ஆகியவை பாறைச் சரிவு அல்லது மண்சரிவு எனப்படுகின்றன.[1]).
பனிப்பாள மீதான சுமை ஈர்ப்பால் மட்டுமே அமைந்தால், பாள மெலிவுகளாலோ தொடர் பனிப்பொழிவுச் சுமையாலோ பனிச்சரிவுகல் ஏற்படலாம். இந்நிகழ்வால் ஏற்பட்ட பனிச்சரிவுகள் தன்னியல்புப் பனிச்சரிவுகள் எனப்படுகின்றன. மாந்த, உயிரியல் செயல்பாடுகளால் உருவாகும் சுமைகளாலும் பனிச்சரிவுகள் ஏற்படலாம். நிலநடுக்கச் செயல்பாட்டாலும் கூட பனிப்பாளங்கள் பிளந்து பனிச்சரிவுகள் ஏற்படலாம்.
முதன்மையாக, இவை பனி, காற்று இரன்டன் கலவையால் அமைந்தாலும், மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி, பாறைகள், மரங்கள் போன்ற பொருள்களையும் உள்ளடக்கலாம். என்றாலும் இவை பாய்மை மிகுத மண்சரிவினும் பனிக்கலபில்லாத பாறைச் சரிவினும் பனிப்பொழிவின்போது பனிஆற்று பனிக்குன்றுக் கவிழ்வில் இருந்தும் வெறுபட்டவை.ஈவை அருகியனவோ தற்செயல் நிகழ்ச்சிகளோ அல்ல. மாறாக, பனிபொழிவால் பனிதிரளும் எந்தவொரு மலையிலும் எப்போது வேளண்டுமானாலும் நிகழத் தகுந்த பேரிடர் நிகழ்வாகும்மிவை மழைக் காலத்திலும் இளவேனிற் காலத்திலும் பொதுவாக நிகழக்கூடியவை. மலைகளில்பனியாற்று இயக்கத்தாலும் இவை எப்போதும் ஏற்பட வாய்ப்புண்டு. இவை மாந்தருக்கும் சொத்துகளுக்கும் பேரழிவை நிகழ்த்தும் இயற்கைப் பேரிடர்களாகும். இதன் அழிவுத் திறமை பெருவேகத்தில் பாயும் பெரும்பொருண்மைப் பனியால் ஏற்படுகிறது.
பனிச்சரிவுகளின் வடிவங்களை வகைபடுத்த பொதுவாக ஏற்கப்பட்ட வகைபாடேதும் வழக்கில் இல்லை. இவற்றை அவற்றின் உருவளவு, அழிப்புத்திறம், தொடங்கிவைக்கும் நிகழ்வு, இயங்கியல் தன்மை ஆகியவற்றால் விவரிக்கலாம்.
பனிச்சரிவுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையில் உலர்ந்த நுண்மணல் போன்ற வெண்பனி சரியத் தொடங்கிக் கடும்விரைவில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். கூடவே கடுங்குளிர்க் காற்றும் வீசும். இரண்டாவது வகையில் ஈரமான தூவிப் பனி சற்று உருகி சரியத் தொடங்கும் ஆனால் இது சற்று மெதுவாகவே நகரும். மூன்றாவது வகையில் மிகப் பெரும் பனிப் பாளம் திடீரென்று புவி ஈர்ப்பு விசையால் சாய்வான பகுதியில் சரியும். பனிச்சரிவு அல்லது பனி அடுக்குச்சரிவு பல கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து வழியில் உள்ளவற்றை மூடிப் புதைக்கும். பிரான்ஸ் நாட்டில் உள்ள மோன்ட்றாக் என்னும் மலையில் 1999ல் 300,000 பருமீட்டர் தூவிப்பனி 30 பாகை சரிவில் சரிந்து மணிக்கு 100 கி.மீ விரைவில் பாய்ந்தது. அதில் 12 பேர் 100,000 டன் பனித்தூவியின் அடியில் புதையுண்டு இறந்தனர். இதே போல முதல் உலகப் போரில் 50,000 அரசப் படையாட்கள் பனிச்சரிவில் மாண்டனர்.(சான்று தேவை)