பாறைநெய் தூய்விப்பாலை
From Wikipedia, the free encyclopedia
பாறைநெய் தூய்விப்பாலை (Petroleum Refinery) என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் கரட்டுப் பாறைநெய்யைக் கன்னெய் (பெட்ரோல் அல்லது gasoline), மண்ணெய், டீசல், எரிநெய், எரிவளி முதலான பயனுள்ள பல புதுக்குகளாகப் பிரித்தெடுக்கும் ஒரு ஆலையாகும். நிறையப் புழம்புகளில் (குழாய்களில்) வெவ்வேறு பாய்மங்களைப் பல்வேறு வேதிச்செலுத்த அலகுகளுக்கு (chemical processing units) இடையே செலுத்தித் தூய்விக்கும் இந்த ஆலை மிகவும் பரந்துபட்ட இடத்தில் அமைந்திருக்கும்.
நேரடியாக நிலத்தடியில் இருந்து கிடைக்கும் பாறைநெய்யைத் தூய்விக்காமல் அப்படியே பெரிதும் பயன்படுத்த முடியாது. குறை பிசுக்குமையும் குறைந்த கந்தகமும் கொண்ட சில எண்ணெய்களை அப்படியே நீராவி வாகனங்களின் உந்தத்திற்கு எரிபொருளாய்ப் பயன்படுத்த முடிந்தாலும், அதிலே கலந்திருக்கும் வளிமங்கள் வெடிக்கும் சாத்தியங்கள் கொண்டவை என்பதால் அவற்றை அப்படியே பயன்படுத்த இக்குகள் உள்ளன. இதனாலும், பிற காரணங்கள் சிலவற்றாலும் எண்ணெயைத் தூய்வித்து அதனைப் பல பயனுள்ள நிலையான புதுக்குகளாய்ப் பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்துத் தூய்வித்த பொருட்களை எரிபொருட்களாகவும், பக்க விளைவாய்க் கிடைக்கும் பொருட்களைப் பிற வேதிப்பொருட்கள் உருவாக்க ஆரம்பப் பொருட்களாகவும் கொள்ளலாம்.
பாறைநெய் நூற்றுக்கணக்கான நீரியக்கரிமங்களின் கலவையாக இருந்தாலும், அவை வெவ்வேறு கொதிநிலை கொண்டவையாக அமைந்திருப்பதால் காய்ச்சிவடித்தல் அல்லது துளித்தெடுப்பு (distillation) முறையில் இவற்றைப் பிரித்தெடுக்கலாம். இந்நீரியக்கரிமங்கள் மூலக்கூறு அமைப்பில் ஒன்றையடுத்து ஒன்று அதிக நீளம் கொண்டவையாக இருக்கும். அவற்றின் நீளத்திற்குத் தக்கவாறு கொதிநிலையும் முறையே அதிகமாகியவண்ணம் இருக்கும். இந்தக் கொதிநிலை வேறுபாட்டைக் கொண்டு ஒவ்வொரு குறிப்பிட்ட நீரியக்கரிமக்கலவையையும் காய்ச்சி வடித்துப் பிரிக்க முடியும்.
எடைகுறைந்த நீர்ம நீரியக்கரிமப்பொருட்களே (liquid hydrocarbons) வாகன எரிபொருளாக உள்ளெரிப்பு எந்திரங்களில் பயன்படுவதால், அவற்றிற்கான தேவை அதிகமாக இருக்கிறது. அதனால், பெரும்பாலான இன்றைய தூய்விப்பாலைகள் கனமான நீரியக்கரிமங்களையும் எடைகுறைந்த வளிமங்களையும் அதிக மதிப்புக் கொண்ட நீர்ம எரிபொருட்களாய் மாற்றுகின்றன.