பீகார் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
பீகாரின் வரலாறு வடக்கு / கிழக்கு இந்தியாவில் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். பீகாரின் ஒரு பகுதியான மகதம், ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு மைய சக்தியாக இருந்தது. கல்வி மற்றும் பண்பாட்டு மையமாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் இருந்தது. இந்தியாவின் மிக பெரியப் பேரரசுகளில் ஒன்றான மௌரியப் பேரரசும், அதேபோல் இரண்டு முதன்மையான அமைதிவாத மதங்களான பௌத்தம், சைனம் ஆகியவையும் இப்போதைய பீகார் பகுதியில் இருந்து எழுந்தவை.[1] மகதப் பேரரசர்கள், மிக குறிப்பாக மவுரிய மற்றும் குப்தப் பேரரசுகள், தங்கள் ஆட்சியின் கீழ் தெற்கு ஆசியாவில் ஒன்றுபட்ட பெரும் நிலப்பரப்பை ஆண்டனர்.[2] இவர்களின் தலைநகரான பாடலிபுத்திரம், தற்கால பாட்னாவின் அருகில் இருந்தது, இந்த நகரம் இந்திய நாகரீகத்தின் முக்கிய அரசியல், இராணுவ, பொருளாதார மையமாக இருந்தது. மேலும் சமய, இதிகாச நூல்களைத் தவிர்த்த பல இந்திய நூல்கள் பண்டைய பீகாரில் எழுதப்பட்டன. இதில் நாடக நூலான அபிஞான சாகுந்தலம் முதன்மையான நூல்களில் ஒன்று. பீகாரின் இன்னொரு பகுதியான மிதிலை வேத காலத்தில் சனகரின் ஆட்சியின் கீழ் அதிகாரமிக்க நகரமாக இருந்தது என்று நம்பப்படுகிறது. மிதிலை சனகரின் மகளான சீதை ராமனின் மனைவி என வால்மீகி தன் இராமாயணத்தில் எழுதியுள்ளார். [3]
தற்கால பீகார் பிராந்தியத்தில் மவுரிய அரசுக்கு முந்தைய காலகட்டத்தில் மகதம், அங்கம், மற்றும் வாச்சி கூட்டமைப்பு போன்ற பல அரசாட்சிகளும், குடியரசுகளும் எழுச்சிபெற்றிருந்தன. வாச்சி கூட்டமைப்பு, மகாவீரர் பிறப்புக்கு முன்பே (பொ.ஊ.மு. 599)[4][5] இப்பகுதியிலிருந்த உலகில் நன்கறியப்பட்டப் பழங்கால குடியரசாகும். பீகாரைச் சேர்ந்த குப்த மரபினரின் ஆட்சிக்காலத்தில் கலாச்சார மலர்ச்சி, கல்வியிலும் சிறந்து விளங்கியதால் இக்காலகட்டம் இந்தியாவில் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
பாலப் பேரரசும் தங்கள் தலைநகராகப் பாடலிபுத்திரத்தைக் கொண்டிருந்தனர். பாலப் பேரரசின் காலத்திற்கு பிறகு, இந்திய வரலாற்றில் பீகார் மிகச்சிறிய பாத்திரத்தையே வகித்தது. ஆனால் 1540களின் இடைக்காலத்தில் சூர் பேரரசு தோன்றியபின் இந்நிலை மாறினாலும், 1556 ஆம் ஆண்டில் சூர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பீகார் மீண்டும் இந்தியாவில் ஒதுக்கப்பட்டப் பகுதியாக மாறியது. அதன்பிறகு இப்பகுதி பிரித்தானியர் காலத்தில் 1750 முதல் 1857-58 வரை நடந்த போர்களின் களமாக இருந்தது. 1912 ஆம் ஆண்டு, மார்ச் 22 இல் பீகார் பிரித்தானிய இந்தியப் பேரரசில் ஒரு தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. 1947 சுதந்திரம் பெற்றபிறகு, பீகார் இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமாக இருந்து வருகிறது.