வேதி வினை
From Wikipedia, the free encyclopedia
வேதி வினை (Chemical reaction) என்பது வேதிப்பொருட்களின் ஒரு தொகுதி வேறு வேதிபொருட்களின் தொகுதியாக மாற்றம் அடையும் செயல்முறை வேதிவினை எனப்படும் [1]. அணுக்களுக்கு இடையில் வேதிப்பிணைப்புகள் உடையும் போதும், உருவாகும் போதும் எலக்ட்ரான்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் செயல் வேதிவினையில் உள்ளடங்குகிறது. இத்தகைய இடமற்றத்தின் போது அணுவின் உட்கருவில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. வினையில் ஈடுபடும் தனிமங்களிலும் எந்தவிதமான மாற்றமும் நிகழ்வதில்லை. இச்செயல்முறை பெரும்பாலும் வேதிச்சமன்பாட்டின் மூலம் விவரிக்கப்படுகிறது. நிலையற்ற மற்றும் கதிரியக்கத் தனிமங்களின் வேதிவினையில் எங்கெல்லாம் மின்னணு மற்றும் அணுக்கரு மாற்றங்கள் இரண்டும் நிகழ்கிறதோ, அத்தகைய வினைகளை உள்ளடக்கிய வேதியியல் துணைப்பிரிவு அணுக்கரு வேதியியல் எனப்படுகிறது.
வேதிவினையில் தொடக்கத்தில் ஈடுபடும் பொருள்கள் வினைபடு பொருள்கள் எனப்படுகின்றன. வேதிவினைகள் அனைத்திலும் ஒரு வேதிமாற்றம் நிகழ்தல் ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறது. இம்மாற்றம் வேதி வினையின் முடிவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய பொருட்கள் விளைகின்றன. இவை வினைபடு பொருட்களின் பண்புகளிலிருந்து வேறுபடுகின்றன. ஒரேபடிநிலையில் வினைபடு பொருட்கள் வினையில் ஈடுபட்டு இடைநிலை விளைபொருட்கள் எதையும் உருவாக்காமல் நேரடியாக வினைவிளை பொருட்களைக் கொடுத்தால் அவ்வினைகள் தொடக்க வினைகள் எனப்படும். சில வினைகள் இத்தகைய தொடக்க வினைகளுடன் தொடர்ச்சியாக மேலும் சில துணை-படிநிலைகளிலும் நிகழ்கின்றன. தொடக்க வினையில் தொடங்கி இறுதி வினைவிளை பொருள் உருவாகும் வரையிலான வினை நடவடிக்கைகளை துல்லியமாகக் கூறுதல் வினைவழிமுறை எனப்படுகிறது. வேதிவினைகள் வேதிச் சமன்பாடுகளால் விவரிக்கப்படுகின்றன, இச்சமன்பாடுகளில் வினைபடு பொருட்கள், வினை விளைபொருட்கள், சிலசமயங்களில் இடைநிலைப் பொருட்கள் மற்றும் வினைக்கான நிபந்தனைகள் முதலானவை இடம்பெறுகின்றன.
கொடுக்கப்படும் வெப்பநிலை, அடர்த்தி ஆகியனவற்றுக்கு ஏற்ப வேதிவினைகளின் வினைவேகம் அடையாளப்படுத்தப்படுகிறது. குறிப்பாக வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க வினைவேகம் அதிகரிக்கிறது. ஏனெனில் அணுக்களுக்கு இடையில் இருக்கும் பிணைப்புகளை உடைப்பதற்குத் தேவையான வினையூக்க ஆற்றலைப் பெற அதிக அளவு வெப்ப ஆற்றல் அவசியமாகும்.
வேதிச்சமநிலையை அடையும் வரை அல்லது வினை நிறைவடையும் வரை வேதிவினைகள் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ நிகழ்கின்றன. சமநிலையை அணுகுவதற்காக முன்னோக்கு திசையில் நிகழும் வினைகள் பெரும்பாலும் தன்னிச்சையான வினைகள் என விவரிக்கப்படுகின்றன, இவ்வினைகள் முன்னோக்கிச் செல்ல கட்டற்ற ஆற்றல் எதுவும் உள்ளிடத் தேவையில்லை. தன்னிச்சையற்ற வேதி வினைகள் முன்னோக்கி நிகழ ஆற்றலை உள்ளிட வேண்டியது அவசியமாகும். மின்கலனுக்கு மின்னேற்ற அதையொரு மின் ஆற்றல் மூலத்துடன் இணைப்பது அல்லது ஒளிச்சேர்க்கை மூலம் மின்காந்த கதிரியக்கத்தை சூரிய ஒளி வடிவில் ஈர்த்துக் கொள்வதும் உதாரணமாகும்.
தேவையான ஒரு குறிப்பிட்ட பொருளை தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேதித் தொகுப்பு வினைகளில் பல்வேறுவகையான வேதிவினைகளை ஒன்றாக இணைத்தும் தொகுக்கப்படுகின்றன. உயிர்வேதியியல் தொகுப்பு வினைகளில் ஒரு வினையின் விளைபொருள் அடுத்தவினையின் வினைபடு பொருளாகச் செயல்படும்படியாக வளர்சிதைமாற்ற வழிமுறைகள் உதவுகின்றன. புரத நொதிகள் இவ்வினைகளை ஊக்குவித்து வினைவேகத்தை அதிகரிக்கின்றன. எனவே சாதாரண நிபந்தனைகளில் வளர்சிதைமாற்ற தொகுப்பு வினைகளுக்கு சாத்தியம் இருப்பதில்லை. செல்லினுள் உள்ள வெப்பநிலை மற்றும் அடர்த்தியினால் மட்டுமே இத்தொகுப்பு வினைகள் தோன்றுகின்றன.
அணுக்களை விட சிறியதாக இருக்கும் கூறுகளுக்கிடையிலான அணுக்கரு வினைகள், கதிரியக்கச் சிதைவுகள், மற்றும் குவாண்டம் புலக்கோட்பாடு மூலம் விவரிக்கப்படும் அடிப்படைத் துகள்களுக்கிடையில் நடைபெறும் வினைகள் போன்றவற்றையும் வேதி வினைகள் என்றே குறிப்பிடுகின்றனர்.