1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
1936 இல் பெர்லினில் நடந்த 11வது ஒலிம்பிக் போட்டிகள் / From Wikipedia, the free encyclopedia
1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1936 Summer Olympics, இடாய்ச்சு: ஒலிம்பிஷே சம்மர்ஸ்பீலே 1936), அலுவல்முறையாக பதினோராவது ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the XI Olympiad) நாட்சி ஜெர்மனியில் பெர்லினில் நடந்த பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளை நடத்திட பார்செலோனா, எசுப்பானியாவை வென்று பெர்லின் உரிமை பெற்றது; நாசிசம் அதிகாரம் பெறுவதற்கு இரண்டாண்டுகள் முன்னதாக பார்சிலோனாவில் ஏப்ரல் 26, 1931இல் நடந்த ப.ஒ.கு அமர்வில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
1932இல் நடந்த இலாசு ஏஞ்செலசு ஒலிம்பிக்கை விடச் சிறப்பாக நடத்திட 100,000-இருக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான தடகள விளையாட்டரங்கு, ஆறு சீருடற் பயிற்சியரங்குகள், மற்றும் பல சிறிய அரங்குகளை செருமனி கட்டமைத்தது. தொலைக்காட்சியில் முதலில் காட்டப்பட்ட ஒலிம்பிக்காக அமைந்தது; வானொலி ஒலிபரப்பு 41 நாடுகளில் பரப்பப்பட்டது.[1] $7 மில்லியன் செலவில் இந்தப் போட்டிகளை திரைப்படமாக்க செருமானிய ஒலிம்பிக் குழு திரைப்பட இயக்குநர் லெனி ரீபென்ஸ்டாலை பணியமர்த்தியது.[1] தற்போது விளையாட்டுக்களை படமாக்குவதில் பயன்படுத்தப்படும் பல பொது நுட்பங்களுக்கு இவரது திரைப்படம் ஒலிம்பியா முன்னோடியாக இருந்தது.
அரசுத்தலைவர் இட்லர் தனது அரசின் சாதனைகளையும் செருமானிய இனத்தின் உயர்வினையும் எடுத்துக் காட்ட இந்தப் போட்டிகளை ஒரு கருவியாக எண்ணினார். அலுவல்முறையான நாட்சி நாளிதழ் ஃபோக்கிஷேர் பியோபாஸ்டர் இந்த விளையாட்டுக்களில் யூதர்கள் கண்டிப்பாக பங்கேற்கக் கூடாது என எழுதியது.[2][3] இருப்பினும், மற்ற நாடுகள் இந்தப் போட்டிகளை புறக்கணிப்போம் என அச்சுறுத்திய பிறகு அனைத்து இனத்தவரும் பங்கேற்க இசைந்தார்.
இந்தப் போட்டிகளில் நுழைவுச்சீட்டு வருமானம் செருமானிய இடாய்ச்சுமார்க் 7.5 மில்லியனாகவும் இலாபம் ஒரு மில்லியனாகவும் இருந்தது. ஆனால் செலவுகளில் பெர்லின் நகரம் கட்டமைப்புகளுக்கு செலவழித்ததும் தேசிய அரசு செலவழித்ததும் சேர்க்கப்படவில்லை.[4] ஓட்டப்பந்தயங்களிலும் நீளம் தாண்டுதலிலும் ஜெசி ஓவென்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று போட்டிகளின் நாயகனாகத் திகழ்ந்தார். போட்டி நடத்திய நாடு மிகுந்த பதக்கங்களையும் (89 பதக்கங்கள்), அமெரிக்க ஐக்கிய நாடு இரண்டாவதாக 56 பதக்கங்களையும் வென்றன. அடுத்த 12 ஆண்டுகளுக்கு இரண்டாம் உலகப் போர் காரணமாக எந்த ஒலிம்பிக் போட்டிகளும் நடக்கவில்லை. இதற்கடுத்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1948இல் இலண்டனில் நடந்தன.
1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இளவயது வீரர் இந்தியாவைச் சேர்ந்த அருள் சாமி. இவர் இந்தியா சார்பில் மாரத்தன் போட்டியில் பங்கேற்றார். [5]