1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ( 1964 Summer Olympics) அலுவல்முறையாக XVIII ஒலிம்பியாடு விளையாட்டுப் போட்டிகள் (第十八回オリンピック競技大会, Dai Jūhachi-kai Orinpikku Kyōgi Taikai),சப்பானின் தோக்கியோவில் 1964ஆம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 24 வரை நடத்தப்பட்ட பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். தோக்கியோ நகருக்கு 1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவாயிருந்தது; ஆனால் சப்பான் சீனா மீது படையெடுத்ததால் இந்த வாய்ப்பு எல்சிங்கிக்குத் தரப்பட்டது; ஆனால் இதுவும் இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது.
1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும். இந்த விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக விளையாட்டுக்களில் இனவொதுக்கலை கண்டித்து தென்னாபிரிக்கா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.[1][2] (இருப்பினும் தென்னாபிரிக்கா 1964இல் தோக்கியோவில் நடந்த மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.)[3] தோக்கியோவிற்கு ஒலிம்பிக்கை ஏற்றுநடத்தும் உரிமையை மேற்கு செருமனியில் மே 26, 1959இல் கூடிய 55வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு வழங்கியது.