உடை
ஆள் பாதி ஆடைப் பாதி என்பர். / From Wikipedia, the free encyclopedia
மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை (ஒலிப்புⓘ) (clothing, clothes, attire) எனலாம். சில வேளைகளில், காலணிகளும், அணிகலன்களும் உடை என வகைப்படுத்தப்படுவது உண்டு. உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என்பதுடன், இன்று மனிதரின் மிகவும் அடிப்படையான மூன்று தேவைகளுள் உடையும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய இரண்டும் உணவு, உறையுள் என்பன. உடை உடுக்கப்படுவதற்கு தொழிற்பாட்டுக் காரணிகளும், சமூகக் காரணிகளும் உண்டு. உடை உடலை வெளிச் சூழலில் இருந்து பாதுகாக்கின்றது. வெளி மாசுகளில் இருந்தும், காலநிலைக் கூறுகளான குளிர், வெயில், மழை போன்றவற்றில் இருந்தும் உடலைக் காப்பாற்றுவதில் உடைக்கு முக்கிய பங்கு உண்டு.கொசு போன்ற பூச்சிக் கடிகளில் இருந்தும், கேடு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களில் இருந்தும் உடை உடலை காக்கின்றது. கரடுமுரடான மேற்பரப்புகளால் உடலில் காயங்கள் ஏற்படாதிருக்க, தோலுக்கும் அத்தகைய மேற்பரப்புக்களுக்கும் இடையே ஒரு தடுப்பாகவும் உடை செயல்படுகின்றது. கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவதையும் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தும் உடை, புறவூதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்தும் மனிதருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது. தீ, ஆயுதங்கள் போன்றவற்றில் இருந்தும், கதிர்வீச்சு போன்றவற்றிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பதற்காக சிறப்பு உடைகளும் உள்ளன.