பாபுர்
முதல் முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1526-1530) / From Wikipedia, the free encyclopedia
பாபுர் (Babur, பாரசீகம் - بابر, பொருள்: புலி; பெப்ரவரி 14, 1483 – திசம்பர் 26, 1530) என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது இயற்பெயர் மிர்சா சாகிருதீன் முகம்மது (Mīrzā Zahīr ud-Dīn Muhammad) ஆகும். இவர் தன் தந்தை மற்றும் தாய் வழியே, முறையே தைமூர் மற்றும் செங்கிஸ் கானின் வழித்தோன்றல் ஆவார்.[3] இவருக்கு இறப்பிற்குப் பிந்தைய பெயராக பிர்தவ்சு மகானி ('சொர்க்கத்தில் வாழ்பவர்') என்ற பெயர் கொடுக்கப்பட்டது.[4]
பாபுர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
காஷி[1] | |||||||||
பாபுரின் கற்பனை ஓவியம், ஆரம்ப 17ஆம் நூற்றாண்டு | |||||||||
முகலாயப் பேரரசர் (பாடிஷா) | |||||||||
ஆட்சிக்காலம் | 20 ஏப்ரல் 1526 – 26 திசம்பர் 1530 | ||||||||
முன்னையவர் | லௌதி அரசமரபின் கடைசி சுல்தானாக (தில்லி சுல்தானாக) இப்ராகிம் லௌதி | ||||||||
பின்னையவர் | நசிருதீன் உமாயூன் | ||||||||
காபுலின் அமீர் | |||||||||
ஆட்சிக்காலம் | 1504–1526 | ||||||||
முன்னையவர் | முகின் பெக் | ||||||||
பின்னையவர் | முகலாயப் பேரரசராக இவரே | ||||||||
பெர்கானாவின் அமீர் | |||||||||
ஆட்சிக்காலம் | 1494–1497 | ||||||||
முன்னையவர் | இரண்டாம் உமர் சேக் மிர்சா | ||||||||
பிறப்பு | மிர்சா சாகிருதீன் முகம்மது (1483-02-14)14 பெப்ரவரி 1483 ஆண்டிஜன், தைமூரியப் பேரரசு | ||||||||
இறப்பு | 26 திசம்பர் 1530(1530-12-26) (அகவை 47) ஆக்ரா, முகலாயப் பேரரசு | ||||||||
புதைத்த இடம் | |||||||||
பட்டத்து இராணி | மகம் பேகம் (தி. 1506) | ||||||||
மனைவிகள் மேலும்... |
| ||||||||
குழந்தைகளின் #குழந்தைகள் |
| ||||||||
| |||||||||
அரசமரபு |
| ||||||||
தந்தை | இரண்டாம் உமர் சேக் மிர்சா | ||||||||
தாய் | குத்லுக் நிகர் கனும் | ||||||||
மதம் | சன்னி இசுலாம்[2] |
பாபுர் சகதாயி துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டவர் ஆவார்.[5] இவர் பெர்கானாப் பள்ளத்தாக்கின் ஆண்டிஜனில் (தற்போதைய உசுபெக்கிசுத்தான்) பிறந்தார். இவர் இரண்டாம் உமர் சேக் மிர்சாவின் (1456–1494, பெர்கானாவின் ஆளுநராக 1469–1494) முதல் மகன் ஆவார். இவரின் சேயோன் தைமூர் (1336–1405) ஆவார். பாபுர் பெர்கானாவின் தலைநகரான அக்சிகெந்தில் 1494ஆம் ஆண்டு அரியணைக்கு தனது பன்னிரண்டாம் வயதில் வந்தார். கிளர்ச்சியை எதிர்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் சமர்கந்தை வென்றார். எனினும், பிறகு சீக்கிரமே, பெர்கானவை இழந்தார். பெர்கானவை மீண்டும் வெல்லும் தனது முயற்சியில் சமர்கந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். 1501இல் இந்த இரண்டு பகுதிகளையும் மீண்டும் வெல்லும் இவரது முயற்சியானது முகம்மது சாய்பானி கான் இவரைத் தோற்கடித்த போது தோல்வியில் முடிந்தது. 1504இல் இரண்டாம் உலுக் பெக்கின் குழந்தை வாரிசான அப்துர் இரசாக் மிர்சாவின் ஆட்சியில் இருந்ததாகக் கருதப்படும் காபூலை இவர் வென்றார். சபாவித்து ஆட்சியாளர் முதலாம் இசுமாயிலுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திய பாபுர், சமர்கந்து உள்ளிட்ட துருக்கிஸ்தானின் பகுதிகளை மீண்டும் வென்றார், ஆனால், மீண்டும் சமர்கந்தையும், பிற புதிதாக வெல்லப்பட்ட நிலங்களையும் சாய்பனிடுகளிடம் இழந்தார்.
சமர்கந்தை மூன்றாவது முறையாக இழந்ததற்குப் பிறகு, பாபுர் தன்னுடைய கவனத்தை இந்தியா மீது திருப்பினார். அண்டை நாடுகளான சபாவித்து மற்றும் உதுமானியப் பேரரசுகளின் உதவியைப் பயன்படுத்தினார்.[6] பொ. ஊ. 1526இல் முதலாம் பானிபட் போரில் தில்லியின் சுல்தானாகிய இப்ராகிம் லௌதியைத் தோற்கடித்தார். முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தார். அந்நேரத்தில், தில்லி சுல்தானகமானது நீண்ட காலமாகச் சிதைந்து வந்த ஒரு காலம் போன சக்தியாக இருந்தது. வட இந்தியாவிலிருந்த வலிமையான சக்திகளில் ஒன்றாக இராணா சங்காவின் திறமையான ஆட்சியின் கீழிருந்த மேவார் இராச்சியமானது மாறி இருந்தது. பிரிதிவிராச் சௌகானுக்குப் பிறகு பல இராசபுத்திர இனக் குழுக்களைச் சங்கா ஒன்றிணைத்தார்.[7] பாபுருக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணியாக 1,00,000 இராசபுத்திரர்களைக் கொண்ட இராணுவத்துடன் முன்னேறினர். எனினும், பாபுரின் திறமையான துருப்புகளின் கள அமைப்பு, நவீன உத்திகள் மற்றும் வெடிமருந்தைப் பயன்படுத்தியது ஆகிய காரணங்களால் கன்வா யுத்தத்தில் சங்கா ஒரு முக்கியத் தோல்வியைச் சந்தித்தார். இந்திய வரலாற்றில், முதலாம் பானிபட் போரை விட, கன்வா யுத்தமானது மிக முக்கியமான யுத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவை முகலாயர்கள் வென்றதில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இராணா சங்காவின் தோல்வி கருதப்படுகிறது.[8][9][10]
பாபுர் பலமுறை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நசிருதீன் உமாயூன், கம்ரான் மிர்சா மற்றும் இன்டால் மிர்சா ஆகியோர் ஆவர். பாபுர் 1530ஆம் ஆண்டு ஆக்ராவில் இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் உமாயூன் ஆட்சிக்கு வந்தார். பாபுர் முதலில் ஆக்ராவில் புதைக்கப்பட்டார். ஆனால், இவரது விருப்பத்தின்படி இவரது உடலானது காபூலுக்குச் கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் புதைக்கப்பட்டது. உசுபெக்கிசுத்தான் மற்றும் கிர்கிசுத்தானில் இவர் ஒரு தேசியக் கதாநாயகனாகக் கருதப்படுகிறார். இவரது பெரும்பாலான கவிதைகள் பிரபலமான நாட்டுப்புற பாடல்களாக உருவாகியுள்ளன. சகதாயி மொழியில் இவர் தன் சுயசரிதையான பாபுர் நாமாவை எழுதினார். இந்நூல் இவரது பேரன் பேரரசர் அக்பரின் ஆட்சியின் (1556–1605) போது பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.