பண்ணுறவாண்மை
From Wikipedia, the free encyclopedia
பண்ணுறவாண்மை அல்லது அரசனயம் (Diplomacy) என்பது குழுக்களின் அல்லது நாடுகளின் பேராளர்களுடன் பேரப் பேச்சுக்களை நடத்தும் நடைமுறையும் கலை ஆகும்.[1] நாடுகளிடையே விவகாரங்களைப் பகைமை இன்றிக் கையாளும் உத்தியே இது என்றும் பொருள் கொள்ளப்படுவது உண்டு. பொதுவாக இது, அமைதி, வணிகம், போர், பொருளாதாரம், பண்பாடு சூழல் மற்றும் மனித உரிமை விடயங்கள் ஆகியவை தொடர்பான விடயங்களில் நாடுகளிடையேயான உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவே இச்சொல் பயன்படுகிறது. இவ்விடயங்களை தொழில் அடிப்படையிலான பண்ணுறவாளர்களே கையாள்வர். நாடுகளிடையேயான ஒப்பந்தங்களை நாடுகளின் அரசியலாளர்கள் ஏற்றுக் கொண்டு கைச்சாத்திடுமுன், பண்ணுறவாளர்களே இவற்றுக்கான பேச்சுக்களை நடத்துவர். முறைசாராவிதத்தில்,சமூகக் கருத்தின் அடிப்படையில் கூறுவதாயின் பொதுவான பிரச்சனைகளிற்கு இருதரப்புகளும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளைக் காணுதல் அல்லது தந்திரோபாயமான சாதகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உத்திகளை மோதலற்ற விதத்தில் பிரயோகிப்பதே அரசனயம் ஆகும். 1900 வாக்கில் "பண்ணுறவாளர்கள்" என்ற வார்த்தை பண்ணுறவு சேவைகள், தூதரக சேவைகள் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக டேவிட் ஸ்டீவன்சன் தெரிவிக்கிறாா்.[2]