விண்மீன்
From Wikipedia, the free encyclopedia
விண்மீன், உடு, நாள்மீன், அல்லது நட்சத்திரம் (star) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வளிகளாலும் பிளாசுமாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன.[1] பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். எனினும் சூரியன் பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது வட்டமான தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; பொதுவாக அனைத்து விண்மீன்களும் ஒளி, வெப்பம், புற ஊதாக் கதிர்கள், ஊடு (எக்சு ரே) - கதிர்கள் மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன.[2] உடுக்களில் அதிகமாக ஐதரசனும், ஈலியமுமே காணப்படுகின்றது. அங்கு ஐதரசன் அணுக்கரு இணைவு மூலம் ஈலியமாக மாறும் செயற்பாடு இடம்பெறும்.
அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.[3]
சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,00,00,00,00,00,00,00,00,00,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் உடுத்தொகுதிகளாகவும், கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3,000 தென்படும்.[4]
விண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது ஈலியத்தை காபன், ஒட்சிசன் போன்ற வேறு சில பாரிய இரசாயன மூலகங்களாக மாற்ற முற்படும். இதன்போது அணுக்கரு இணைவு வினை அளவுக்கு அதிகமான ஆற்றலை உற்பத்தியாக்கும். இந்த ஆற்றல் விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி கதிர்வீச்சாக மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்லது ஆற்றல் மின்காந்தக் கதிவீச்சு என அழைக்கப்படும்.