கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.
மியூசிக் அகாதெமி என்றழைக்கப்படும் கலை மன்றம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ளது. இக்கலை மன்றம், 'சங்கீத வித்வத் சபை' என்றும் அழைக்கப்படுகிறது. கருநாடக இசையின் நலம் விரும்பிகள் மற்றும் இசை விரும்பிகள், அப்போதைய மெட்ராஸ் நகரத்தில் ஒரு கலை மன்றத்தை நிறுவ விரும்பினர். அகில இந்திய இசை மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது, இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய இசையை வளர்க்கும் முகமாகவும், இசையைப் பற்றி தத்துவம் மற்றும் பயிற்சி ரீதியாக கற்றுத்தரும் வகையிலும் இக்கலை மன்றம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இந்த மாநாட்டுக்கென அமைக்கப்பட்ட வரவேற்பு குழு, 1928 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று தற்காலிகமானதொரு செயற்குழுவை தேர்ந்தெடுத்தது. கலை மன்றத்தை நிறுவும் பொறுப்பு அச்செயற்குழுவிடம் தரப்பட்டது.
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார்.
ஒரு இசை நிகழ்ச்சியில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள், பக்கவாத்தியம் என்றழைக்கப்படும்.
மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15 வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், துக்கடா என அழைக்கப்படும். துக்கடா என்பதற்கு ‘அளவில் சிறிய’ எனப்பொருள்.