2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2015 Cricket World Cup) 11-ஆவது துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். இதனை ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்தின. போட்டிகள் 2015 பெப்ரவரி 14 தொடக்கம் மார்ச் 29 வரை நடைபெற்றன. மொத்தம் 14 நாடுகள் பங்குபற்றிய 44 போட்டிகள் 14 அரங்குகளில் இடம்பெற்றன. ஆத்திரேலியா 26 போட்டிகளை அடிலெயிட், பிரிஸ்பேன், கான்பரா, ஹோபார்ட், மெல்பேர்ண், பேர்த், சிட்னி ஆகிய நகரங்களிலும், நியூசிலாந்து 23 போட்டிகளை ஆக்லன்ட், கிறைஸ்ட்சேர்ச், துனெடின், ஆமில்ட்டன், நேப்பியர், நெல்சன், வெலிங்டன் ஆகிய நகரங்களிலும் நடத்தின.[2]
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல் முறை மற்றும் வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ஆத்திரேலியா நியூசிலாந்து |
வாகையாளர் | ஆத்திரேலியா (5-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 14[1] |
மொத்த போட்டிகள் | 49 |
தொடர் நாயகன் | மிட்செல் ஸ்டார்க் |
அதிக ஓட்டங்கள் | மார்ட்டின் கப்டில் (547) |
அதிக வீழ்த்தல்கள் | மிட்செல் ஸ்டார்க் (22) டிரென்ட் போல்ட் |
அலுவல்முறை வலைத்தளம் | CricketWorldCup.com |
← 2011 2019 → |
இப்போட்டிகளை ஏற்றுநடத்தும் உரிமை 2011 உலகக்கிண்ணம் மற்றும் 2019 உலகக்கிண்ணங்களை ஏலம் விடும்போது தீர்மானிக்கப்பட்டது. 2011 உலகக்கிண்ணம் நடத்த நான்கு ஆசிய தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளான இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம் இணைந்து பத்துக்கு மூன்று என்ற வாக்குகளில் தேர்வானது (ஆயினும் பின்னர் பாக்கித்தான் ஏற்று நடத்தும் உரிமையை இழந்தது). டாசுமானிய நாடுகளின் முயற்சியால் கவரப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை ஆத்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் வழங்கியது.[3][4] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகளை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இரண்டாம் முறையாக, 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு, இணைந்து நடத்துகின்றன. சச்சின் டெண்டுல்கர் இச்சுற்றுத்தொடரின் தூதுவராக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நியமிக்கப்பட்டார்.[5]
2011 இல் இந்திய உபகண்டத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை 6 இழப்புகளால் வெற்றி கொண்ட இந்திய அணி இம்முறை நடப்பு வாகையாளராக போட்டியிட்டது. பிரிவு ஆ-வைச் சேர்ந்த அணிகளான இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான 15 பெப்ரவரி 2015 நடைபெற்ற போட்டியின் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் 12 நிமிடங்களுக்குள்ளேயே விற்று முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.[6]
மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆத்திரேலிய அணிகள் மோதின. 93,013 பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்வாட்டத்தில்[7] ஆத்திரேலியா 7 இழப்பகளால் நியூசிலாந்தை வென்று ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.