உரூரன் ககானரசு
From Wikipedia, the free encyclopedia
உரூரன் ககானரசு[1][2] என்பது ஒரு பழங்குடியினக் கூட்டமைப்பு ஆகும். ஆதி மங்கோலியத் தோங்கு மக்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்களால் இந்த அரசு நிறுவப்பட்டது.[3][4] உரூரன் ககானரசின் ஆட்சியாளர்கள் முதன் முதலில் "ககான்" என்ற பட்டத்தைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுகின்றனர். இவர்கள் இந்தப் பிரபலமான பட்டத்தை சியான்பேயிடமிருந்து பெற்றனர்.[5] இந்த ககானரசு 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்திருந்தது. பிறகு ஒரு கோக் துருக்கியக் கிளர்ச்சியால் தோற்கடிக்கப்பட்டது. கோக் துருக்கியக் கிளர்ச்சியானது இறுதியாக உலக வரலாற்றில் துருக்கியர்களின் எழுச்சிக்கு இட்டுச் சென்றது.
இக்ககானரசு ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு, சில எஞ்சிய உரூரன்கள் தாதர்கள் ஆயினர்.[6][7] மற்ற பிறர் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அவர்கள் பன்னோனிய ஆவர்கள் ஆயினர். ஆவர்கள் 6ஆம் நூற்றாண்டின் போது தற்போதைய அங்கேரியை மையமாகக் கொண்டிருந்த பன்னோனியா என்ற இடத்தில் குடியமர்ந்தனர்[8]. இந்த ஆவர்களை பைசாந்தியப் பேரரசு வரை கோக் துருக்கியர்கள் துரத்தினர். கோக் துருக்கியர்கள் அவர்களை அடிமைகள் அல்லது அடிபணிந்த மக்கள் எனக் குறிப்பிட்டனர். ஆவர்களை வெளியேற்றுமாறு பைசாந்தியர்களிடம் கோரினர். இந்த உரூரன்-ஆவர்கள் தொடர்பானது ஒரு சர்ச்சைக்குரிய கோட்பாடாக உள்ளது. சமீபத்திய மரபணு ஆராய்ச்சியானது, ஆவர்களின் ஆட்சியாளர்களின் மரபணுப் பூர்வீகமானது மங்கோலியச் சமவெளிகளில் தொடங்கி இருப்பதை உறுதி செய்தது.[9]