தலாய் லாமா
திபெத் மக்களின் ஆன்மிக அரசியல் தலைவர் பதவி. / From Wikipedia, the free encyclopedia
தலாய் லாமா (Dalai Lama) என்பது கெலுக் (கெலுக்பா) அல்லது மஞ்சள் தொப்பி என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா (திபெத்தியம்: བླ་མ, bla-ma, ஆசான், குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும்[1]. திபெத்திய மொழியில் "லாமா" என்னும் சொல் "குரு" என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையானது என்று இன்றைய தலாய் லாமா விளக்கம் தருகிறார்.
தலாய் லாமா | |
---|---|
கெண்டுன் ட்ரப் (முதல் தலாய் லாமா) | |
ஆட்சி | 1391–1474 |
திபெத்தியம் | ཏཱ་ལའི་བླ་མ་ |
வைலி ஒலிப்பெயர்ப்பு | taa la'i bla ma |
உச்சரிப்பு | தலாய் லாமா |
மரபு | தலாய் லாமா / தக்லா |
மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் அவலோகிதரின் அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். கெலுக் அல்லது மஞ்சள் தொப்பி பிரிவின் தலைவர் பதவியின் பெயர் கேண்டன் டிரிபா ஆகும். பலரும் தலாய் லாமா இப்பிரிவின் தலைவர் என கருதுவதுண்டு. தலைவர் பதவியில் ஒருவர் 7 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும் இத்தலைவரை நியமிப்பதில் தலாய் லாமாவிற்கு பெரும்பங்கு உண்டு. தலாய் லாமாக்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
5-வது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார். அதிலிருந்து தலாய் லாமாக்கள் ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். பொ.ஊ. 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை தலாய் லாமாக்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். 14-வது தலாய் லாமா மார்ச் 14, 2011 வரை மத்திய திபெத்திய நிருவாகத்தின் (நாட்டுக்கு வெளியே அமைந்த திபெத் அரசு) தலைவராக இருந்தார். மார்ச் 14, 2011ல் அப்பொறுப்பில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். வருங்காலத்தில் தலாய் லாமா என்ற அமைப்பு நீக்கப்படலாம் என்றும் அடுத்த தலாய் லாமா திபெத்துக்கு வெளியே தேர்த்தெடுக்கப்படுவார், அவர் பெண்ணாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார் [2]. இதை சீன அரசு உடனடியாக மறுத்து அடுத்த தலாய் லாமா சீன அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது.[3][4]