நார்மெர் கற்பலகை
From Wikipedia, the free encyclopedia
நார்மெர் தட்டு அல்லது நார்மெரின் கல் தட்டு (Narmer Palette / Palette of Narmer), பண்டைய எகிப்தின் துவக்க கால அரச மரபு காலத்தின் முதல் வம்ச மன்னராக நம்பப்படும் நார்மெர்காலத்து கல்வெட்டு பலகை ஆகும். அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ கிமு 3200 – கிமு 3000-க்கும் இடைப்பட்டதாகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை தொல்பொருள் என எகிப்தியவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கற்பலகையின் இருபுறத்தில் எகிப்தியக் கடவுளான பசு தேவதையின் சிற்பம், மன்னர் நார்மெரின் சிற்பம், முதல் வம்சத்தினரின் குலக்குறி சின்னமான தேள் மற்றும் விலங்குகள் சிற்பம் மற்றும் பண்டைய எகிப்திய மொழியை விளக்கும் பட எழுத்து குறிப்புகள் கொண்டது. இக்கற்பலகையை 1897–1898-ஆம ஆண்டுகளில்பண்டைய எகிப்திய நகரமான நெக்கென் நகரத்தில் அகழாய்வின் போது கண்டெடுக்கபட்டது. தற்போது நார்மெர் கற்பலகை எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1][2]
நார்மெர் கற்பலகையின் முன் பக்கம் & பின் பக்கம் | |
செய்பொருள் | வண்டல் கல் (siltstone) |
---|---|
அளவு | 64 செமீ x 42 செமீ |
உருவாக்கம் | ஏறத்தாழ கிமு 3200 – 3000 |
கண்டுபிடிப்பு | 1897–1898 |
தற்போதைய இடம் | எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ |
அடையாளம் | CG 14716 |
ஏறத்தாழ 5,100 ஆண்டுகள் பழமையான இக்கற்பலகை எகிப்தின் வரலாற்றையும், நாகரிகத்தையும் விளக்கும் தொல்பொருள் ஆகும். தெற்கு எகிப்தையும், வடக்கு எகிப்தையும் ஒன்றிணைத்ததை நினைவு கூறும் வகையில் மன்னர் நார்மெர் இக்கற்பலகை சின்னத்தை நிறுவினார் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை வலியுறுத்தும் வகையில் இக்கற்பலகையில் தெற்கு எகிப்திய மன்னர்கள் அணிந்த வெள்ளை நிற மகுடமும், வடக்கு எகிப்திய மன்னர்கள் அணிந்த சிவப்பு நிற நீண்ட மகுடமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கற்பலகையில் பண்டைய எகிப்திய கலைகள், பட எழுத்து முறைகள் குறிக்கும் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.[3]நார்மெர் கற்பலகையை, இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வரலாற்று ஆவணம் என எகிப்தியவியல் அறிஞரான பாப் பெரியர் குறிப்பிட்டுள்ளார்.[4]
ஐக்கிய இராச்சியத்தின் தொல்லியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. குயுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 1897–1898-ஆண்டுகளில் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த எட்ஃபூ கோயில் வளாகத்தை அகழாய்வு செய்த போது நார்மெரின் கற்பலகையை கண்டுபிடித்தனர்.[5]