உரோமைப் பேரரசின் இறங்குமுகம்
From Wikipedia, the free encyclopedia
உரோமைப் பேரரசின் இறங்குமுகம் என்பது எட்வர்டு கிப்பனால் 1776இல் ஆக்கப்பட்ட உரோமைப் பேரரசின் இறங்குமுகமும் வீழ்ச்சியும் என்ற நூலில் விவரிக்கப்பட்ட ஓர் கருத்துரு ஆகும். 4வது-5வது நூற்றாண்டுகளில் உரோமைப் பேரரசுக்கு என்னவாயிற்று என்பதை இன்னமும் வரலாற்றியலாளர்கள் விவாதித்து வருகின்றனர். பல கருதுகோள்கள் ஆராயப்பட்டுள்ளன; இவை பெரும்பாலும் அரசியல், பொருளியல்நிலை, படைத்துறை மற்றும் பிற சமூக அமைப்புக்களின் பிளவுகளால் ஏற்பட்டதாக தீர்வு காண்கின்றன. காட்டுமிராண்டிகளின் படையெடுப்பு மற்றும் உள்நாட்டுத் துரோகிகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் கருதுகின்றனர். இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய முற்பட்டதில் கிப்பன் முதலாமவர் இல்லை. அமெரிக்க அறிஞர் கிளென் போவெர்சாக் "18வது நூற்றாண்டிலிருந்து இந்த வீழ்ச்சி நம்மை ஈர்த்துள்ளது: இதுவே ஒவ்வொரு அரசு வீழ்ச்சிக்கும் மூல அடிப்படையாக மதிப்பிடப்படுகிறது; எனவே நமது அச்சங்களுக்கான அடையாளமாக உள்ளது." எனக் கூறியுள்ளார்.[1] 1984இல் செருமன் பேராசிரியர் அலெக்சாந்தர் தெமாந்த் உரோமை வீழ்ச்சிக்கான 210 பல்வேறு காரணங்களை தொகுத்துள்ளார்.[2][3]
இந்த இறங்குமுகம், பின்னோக்கிப் பார்க்கும்போது, நான்கு நூற்றாண்டுகளாக நிகழ்ந்துள்ளது; பரவலாக மேற்கத்திய உரோமைப் பேரரசின் கலைப்பு செப்டம்பர் 4, 476இல் நடந்ததாக கருதப்படுகிறது; செருமானிய குடித்தலைவன் ஓடொசர் கடைசி உரோமைப் பேரரசனான உரோமுலசு அகஸ்டசை அன்றுதான் முடியிறக்கச் செய்தான்.[4] ஆனால் இந்த திகதியை பேரரசின் வீழ்ச்சி நாளாகக் கொள்ள முடியாது என சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கான காரணமாக கிழக்கு உரோமைப் பேரரசினால் அங்கீகரிக்கப்பட்ட யூலியசு நெபோசு தல்மாடியாவில் தொடர்ந்து வாழ்ந்து வந்ததைக் குறிப்பிடுகின்றனர்; யூலியசு நெபோசு 480இல் கொலை செய்யப்பட்டான். பின்னால் வந்த ஓஸ்ட்ரோகோத்துகள் தங்களை உரோமைப் பேரரசின் வம்சாவளியினராக கருதினர்.
378க்குப் பிறகு நடந்த பல நிகழ்ச்சிகள் மேற்கத்திய பேரரசின் நிலையை மோசமாக்கின. 378இல் நடந்த அட்ரியனோப்பிள் சண்டை, 395இல் தியோடொசியசின் மறைவு, 406இல் ரைன் ஆற்றைக் கடந்து வந்த செருமானியக் குடிகள், 408இல் இசுடிலிசோவின் மரண தண்டனை, 410இல் நடந்த உரோம் நகர ஆக்கிரமிப்பு, 421இல் கான்ஸ்டான்டியசு III மரணம், 454இல் பிளாவியசு ஏடியசின் மரணம், 455இல் மீண்டும் உரோமை நகரின் ஆக்கிரமிப்பு, 461இல் மயோரியனின் இறப்பு என பல நிகழ்வுகள் வெவ்வேறு வரலாற்றாளர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அண்மைய கருதுகோள் ஒன்று இந்த வீழ்ச்சி சிக்கலான மாற்றங்களால் நிகழ்ந்ததாக குறிப்பிடுகிறது.[5]