பைசாந்தியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
பைசாந்தியப் பேரரசு (Byzantine Empire) என்பது, மத்திய காலத்தில், இன்று இஸ்தான்புல் என்று அழைக்கப்படும், கொன்சுதாந்தினோபிளைத் தலைநகரமாகக் கொண்டு விளங்கிய பேரரசைக் குறிக்கப் பயன்படுகின்றது. அங்கு கிரேக்க மொழி பேசப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பெயர் வழங்கி வருகின்றது. இது பொதுவாக மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு முந்திய காலத்தைக் குறிக்கிறது. இது கிழக்கு ரோமப் பேரரசு என அழைக்கப்படுவதும் உண்டு. "பைசாந்தியப் பேரரசு" "கிழக்கு ரோமப் பேரரசு" போன்ற பெயர்கள் பிற்காலத்தில் வரலாற்று எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை. அங்கு வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, இதை அவர்கள் ரோமப் பேரரசு என்றோ "ரோமானியா" என்றோதான் அதன் இருப்புக் காலம் முழுதும் அழைத்து வந்தனர்.[2] இது ரோமப் பேரரசின் ஒரு தொடர்ச்சியாகவே கருதப்பட்டதுடன் அதன் பேரரசர்களும், ரோமப் பேரரசர்களின் தொடர்ச்சியான மரபுவழியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். கிபி 5 ஆம் நூற்றாண்டில் மேற்கு ரோமப் பேரரசு துண்டு துண்டாக உடைந்து வீழ்ச்சியுற்றபோதும், அதன் கிழக்குப் பாதி, ஓட்டோமான் துருக்கியர் 1453ல் அதனைக் கைப்பற்றும்வரை, மேலும் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புடன் இருந்தது. இப்பேரரசின் இருப்புக் காலத்தின் பெரும் பகுதியிலும், ஐரோப்பாவின் பலம் மிக்க பொருளாதார, பண்பாட்டு, படைத்துறை வல்லரசாக இது விளங்கியது.
ரோமப் பேரரசு Βασιλεία Ῥωμαίων Vasileía Romaíon | |||||||
---|---|---|---|---|---|---|---|
330–1453 | |||||||
முன்னாள் பேரரசின் சின்னம்[1]
| |||||||
நிலை | பேரரசு | ||||||
தலைநகரம் | கொன்சுதாந்தினோபில்¹ | ||||||
சமயம் | கிழக்கு (கிரேக்க) மரபுவழி கிறிஸ்தவம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
பேரரசன் | |||||||
• 306–337 | முதலாம் கான்ஸ்டன்டைன் | ||||||
• 1449–1453 | பதினோராம் கொன்ஸ்டண்டைன் | ||||||
வரலாற்று சகாப்தம் | நடுப்பகுதி | ||||||
• கொன்சுதாந்தினோபில் அமைப்பு² | மே 11 330 | ||||||
• கிழக்கு-மேற்கு பிரிவினை | 1054 | ||||||
• கொன்சுதாந்தினோபிலின் வீழ்ச்சி | 1204 | ||||||
• கொன்ஸ்டண்டீனொபோல் மீளக் கைப்பற்றப்படல் | 1261 | ||||||
• கொன்சுதாந்தினோபில் வீழ்ச்சி | மே 29 1453 | ||||||
மக்கள் தொகை | |||||||
• 4ம் நூற்றாண்டு³ | 34000000 | ||||||
• 8ம் நூற்றாண்டு | 7000000 | ||||||
• 11ம் நூற்றாண்டு³ | 18000000 | ||||||
• 12ம் நூற்றாண்டு³ | 12000000 | ||||||
• 13ம் நூற்றாண்டு | 3000000 | ||||||
நாணயம் | சொலிடஸ், ஹைப்பர்பைரோன் | ||||||
| |||||||
¹ கொன்சுதாந்தினோபில் (330–1204, 1261–1453). நைசியா பேரரசின் தலைநகர், நைசியா (தற்போது ஈஸ்மித், துருக்கி]])யில் இருந்தது. ² வேறு தேதிகளும் பயன்படுத்தப்பட்டாலும், ரோமப் பேரரசின் தலைநகராக கான்சுதந்தினோப்பிள் ஆக்கப்பட்டதே பொதுவாக நிறுவனத் தேதியாகக் கொள்ளப்படுகிறது ³ மக்கள்தொகை விபரங்களைத் தரும் இந்த அட்டவணையைப் பார்க்கவும். துலானேப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பிரிவினால் வழங்கப்பட்டது. எண்கள், J.C. Russell in "Late Ancient and Medieval Population," published in the Transactions of the American Philosophical Society (1958), ASIN B000IU7OZQ. என்னும் நூலில் உள்ள மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. |
"ரோம", "பைசாந்திய" ஆகிய அடைமொழிகள் பிற்காலத்து வழக்காக இருந்தாலும், இந்த மாற்றம் ஒரு குறித்த நாளில் நிகழ்ந்தது அல்ல. பல கட்டங்களில் இது நிழ்ந்தது எனலாம். 285 ஆம் ஆண்டில் பேரரசர் டியோகிளீசியன் (ஆட்சிக்காலம் 284-305) ரோமப் பேரரசின் நிர்வாகத்தைக் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி என இரண்டு பாதிகளாகப் பிரித்தார்.[3] 324 ஆம் ஆண்டுக்கும், 330 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் (306-337) பேரரசின் முதன்மைத் தலைநகரை ரோமில் இருந்து போசுபோரசின் ஐரோப்பியப் பக்கத்தில் இருந்த பைசாந்தியம் என்னும் இடத்துக்கு மாற்றினார். இந்த நகரின் பெயர் கான்ஸ்டண்டினோபில் (கான்சுதந்தைனின் நகரம்) அல்லது நோவா ரோமா (புதிய ரோம்) என மாறியது. பேரரசர் முதலாம் தியோடோசியசின் (379–395) கீழ் கிறித்தவம் பேரரசின் சமயமாக மாறியது. மாறுநிலையின் இறுதிக்கட்டம், பைசாந்தியப் பேரரசர் ஏராக்கிளியசின் ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் தொடங்கியது. இக்காலத்தில், நிர்வாகம், படைத்துறை ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டதுடன், இலத்தீனுக்குப் பதிலாக கிரேக்க மொழியும் நிர்வாக மொழியாக ஆகியது.[4] இக்காலப் பகுதியில், பேரரசினுள் அடங்கியிருந்த கிரேக்க மொழி பேசாத பகுதிகளான மையக்கிழக்கு, வட ஆப்பிரிக்கா என்னும் பகுதிகளை முன்னேறி வந்த அரபுக் கலீபகத்திடம் பேரரசு இழந்ததுடன், அது பெரும்பாலும் கிரேக்கம் பேசுகின்ற பகுதிகளை அடக்கியதாகச் சுருங்கியது. பைசந்தியப் பேரரசு, இலத்தீன் மொழி, பண்பாடு ஆகியவற்றிலிருந்து விலகி கிரேக்க மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கைக்கொண்டதாலும், ரோம பலகடவுட் கொள்கை கொண்ட சமயத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறியதாலும், தற்காலத்தில் அது, பண்டைய ரோமப் பேரரசில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றது.[2]
முதலாம் யசுட்டினியனின் ஆட்சிக் காலத்தில் (527-565) பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்தது. இக்காலத்தில், பண்டைய ரோமப் பேரரசின் பகுதிகளாக இருந்த நடுநிலக்கடற்கரைப் பகுதிகளான இத்தாலி, வட ஆப்பிரிக்கா போன்றவை கைப்பற்றப்பட்டு பேரரசின் ஆட்சிப்பகுதிக்குள் அடங்கியிருந்தன. ரோம் நகரும் இருநூறு ஆண்டுகள் வரை இதற்குள் அடங்கியிருந்தது. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யசுட்டினியக் கொள்ளைநோய் எனப்பட்ட ஒரு வகைக் கொள்ளை நோய் தாக்கி மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் பலியாகியதால், பெரிய அளவில் படைத்துறை, நிதிப் பிரச்சினைகளைப் பேரரசு எதிர்கொள்ள நேர்ந்தது. இருந்தாலும், பேரரசர் மாரிசின் ஆட்சிக்காலத்தில் (582–602) பேரரசின் கிழக்கு எல்லைப் பகுதிகள் விரிவடைந்ததுடன், மேற்கு எல்லையும் உறுதியாக இருந்தது. எனினும் 602 ஆன் ஆண்டில் மாரிசு கொலை செய்யப்பட்டதால், சசானியப் பாரசீகத்துடன் இரு பத்தாண்டுகள் நீடித்த போர் ஏற்பட்டது. இப்போரில் பேரரசர் ஏராகிளியசு பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், பேரரசின் மனிதவலுவும், வளங்களும் அழிந்துபோயின. இதனால், ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பைசாந்திய-அரபுப் போர்களின்போது பேரரசு பெருந் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்ததுடன், நிலப் பகுதிகளையும் இழந்தது. எனினும் 10 ஆம் நூற்றாண்டில், மசிடோனிய வம்சத்தின் ஆட்சியின் கீழ் ஐரோப்பா, நிலநடுக்கடல் பகுதிகள் ஆகியவற்றின் மிகப் பலம் பொருந்திய நாடாக மீண்டும் எழுச்சி பெற்றது. 1071க்குப் பின்னர், பேரரசின் முக்கிய பகுதியான சின்ன ஆசியாவின் பெரும் பகுதிகள் செல்யூக் துருக்கியரிடம் வீழ்ச்சியுற்றன.
கொம்னெனிய மீள்விப்பினால் 12 ஆம் நூற்றாண்டில் சிறிது காலம் பேரரசின் முதன்மை நிலை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில், முதலாம் மனுவேல் கொம்னெனோசு இறந்து, கொம்னெனோசு வம்ச ஆட்சியும் முடிவுக்கு வந்ததுடன், பேரரசு மேலும் தளர்ச்சியுற்றது. 1204ல் நிகழ்ந்த சிலுவைப் போரில், கான்சுதந்தினோப்பிள் கைப்பற்றப்பட்டதுடன் பேரரசும் கலைக்கப்பட்டுப் பல்வேறு பைசந்தியக் கிரேக்க, இலத்தீன் போட்டிக் குழுக்களிடையே பங்கிடப்பட்டது. பலையோலோகப் பேரரசர்களால் 1261ல் கான்சுதந்தினோப்பிள் மீளக் கைப்பற்றப்பட்டு பேரரசு மீள்விக்கப்பட்டாலும், அதன் கடைசி 200 ஆண்டுக்காலப் பகுதியில், அப்பகுதியில் போட்டியிட்டுக் கொண்டிருந்த பல நாடுகளுள் ஒன்றாகவே பைசந்தியம் இருக்க முடிந்தது. ஆனாலும் இக் காலப்பகுதியும் மிகச் சிறந்த பண்பாட்டு வளம் கொழித்த ஒரு காலப் பகுதியாகவே விளங்கியது. 14 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக இடம் பெற்ற உள்நாட்டுப் போர்கள் பேரரசின் வலிமையைப் பெருமளவு குறைத்ததுடன், பைசாந்திய-ஓட்டோமான் போர்களில் அது எஞ்சிய நிலப்பகுதிகளை இழக்கவும், இறுதியில் 1453ல் கான்சுதந்தினோப்பிளின் வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. 15 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலப் பகுதியில், பேரசின் முழு நிலப் பகுதிகளும் ஓட்டோமான் பேரரசின் வசமானது.