மெசொப்பொத்தேமியாவின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
மெசொப்பொத்தேமியாவின் வரலாறு, கீழ் மெசொப்பொத்தேமியாவில் சுமேரிய நாகரிகம் தோன்றிய நாள் முதல் அறியப்படுகிறது. கிமு 4000 ஆண்டு முதல் இதன் தொல்பொருள் பண்பாட்டு வரலாறு, பண்டைய அண்மை கிழக்கு பகுதியில் தொல்லியல் மேடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலம் அறியப்படுகிறது. பழைய கற்காலம் முதல் துவக்க கால புதிய கற்காலம் வரையில் மேல் மெசொப்பொத்தேமியாவில் மக்கள் குடியிருப்புகள் தோன்றிய போது, பிந்தைய புதிய கற்காலத்தில் கீழ் மெசொப்பொத்தேமியாவில் யூப்பிரடீஸ் ஆறு மற்றும் டைகிரிசு ஆறு பாயும் வண்டல் மண் சமவெளிகளில் மக்கள் குடியிருப்புகள் தோன்றியது. துவக்க வெண்கல காலத்தில் மெசொப்பொத்தேமியா மனித நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கியது. குறிப்பாக சுமேரிய நாகரீகம் பெரிதும் பேசுபொருளாக உள்ளது.
கிமு 4000-இல் கீழ் மெசொப்பொத்தேமியாவில் தோன்றிய முதல் நகரமாக உரூக் விளங்கியது. புது அசிரியப் பேரரசு (கிமு 911–கிமு 609) மற்றும் புது பாபிலோனியப் பேரரசுகளுக்குப் பின்னர் உரூக் நகரத்தை கிமு 539-இல் பாரசீக அகமானிசியப் பேரரசினர் கைப்பற்றினர்.